திருப்பூர் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்.. தீர்வு ஏற்படுத்தக்கோரி இரண்டாவது நாளாக மறியல்

திருப்பூரில் பெய்த கன மழையால் பழவஞ்சிபாளையம் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள, காலனி பகுதியில்  வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது பொதுமக்கள் அவதியுற்றனர் இந்நிலையில்  நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக  கன மழை பெய்து வருகிறது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வீரபாண்டி அடுத்த பழவஞ்சிபாளையம், காலனி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் அந்த பகுதியில் சூழ்ந்துள்ளதால் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது.  அப்பகுதியில் ஏராளமான குழந்தைகள் உள்ள நிலையில் அப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்கு அருகில் உள்ள குட்டை பகுதியில் புதிதாக  வீரபாண்டி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்த குட்டைப் பகுதியில்  மண் கொட்டி மேடுபடுத்தி உள்ளனர். இதனால்  குட்டையில் உள்ள தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.  தற்பொழுது மீண்டும் மழை பெய்வதால்  தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகவும், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டிற்குள் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை விடுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையான வீரபாண்டி சிக்னல் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சமூகவிரத்திற்கு வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது.

Previous Post Next Post