தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு


 

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கோவில்களில் நடைபெறும் தசரா நிகழ்ச்சிகள் நடந்து நிறைவு பெறும் போது மழை தீவிரம் அடையும். அதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய கட்டமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். 60 வார்டுகளிலும் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் நல்ல விழிப்புணர்வோடு இருந்து தங்களது பகுதியில் மழை பெய்தால் எந்த பகுதியில் மழைநீர் தேங்கும் அதை எப்படியெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை முழுமையாக ஆய்வு செய்து எனக்கு உடனுக்குடன் தகவல் தர வேண்டும். 

நானும், ஆணையரும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளை களஆய்வு செய்துள்ளோம். இருந்தாலும் உங்களுடைய ஒத்துழைப்பும் அவசியம் என்பதை கருதி இதை தெரிவிக்கிறேன். பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளோம். 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெற்றது. மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எல்லோருடைய சார்பிலும் மாநகராட்சி நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது என்றார்

அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் 15க்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருவதாகவும், முறையாக குடிநீர் வரவில்லை என்றும், புதிய சாலைகள் பணி செய்து கொடுக்க வேண்டும், கால்வாய்களில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி நீரோடையை சுத்தப்படுத்த வேண்டும், சுகாதாரம் இல்லாத நிலை இருக்கிறது இதையெல்லாம் அதிகாரிகளிடம் கூறும் போது பலர் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்கள் எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர் என்று கவுன்சிலர்கள் புகார் மழை பொழிந்தனர்.  

இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி,  நாம் பொறுப்பேற்ற காலத்தில் இருந்த மாநகராட்சி எப்படி இருந்தது?. இப்போது எப்படி இருக்கிறது என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தியுள்ளோம். பல ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டுள்ளோம். புதிய பூங்காக்களை அமைத்துள்ளோம். அம்மா உணவகத்தை ஒருநாளும் மூட மாட்டோம். நல்லமுறையில் செயல்படுகிறது. தெப்பக்குளத்தில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்கு அதில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்படும். அதை யாரும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கியுள்ளோம். அதில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நல்லமுறையில் வளர்ச்சியடைந்தாலும் ஒரு மாற்றம் ஏற்படும். குறை கூறும் மாமன்ற உறுப்பினர்கள் எல்லா மண்டல அலுவலகத்திலும் நடைபெறும் கூட்டத்திற்கு வரவேண்டும். அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது மண்டல தலைவர்களிடம் உங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வது நல்லதல்ல இதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் பேசியது மட்டுமின்றி குடிதண்ணீர் நீரேற்றும் பம்புகள் பல பழுது ஏற்பட்டுள்ளதால் அதை முழுமையாக சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் எல்லாப் பணிகளுமே நல்லமுறையில் நடைபெறும். மாநகராட்சிப் பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் ஆணையர், துணை மேயர் உள்ளிட்ட எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்

Previous Post Next Post