தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி: ஆட்சியர் தகவல்


 தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வருகின்ற 10.06.2024 முதல் 30.06.2024 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  "தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்; தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,12,000 கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 10.06.2024 முதல் 30.06.2024 வரை 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. கோமாரி நோயானது வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. 

நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

தற்போது நடைபெறவுள்ள ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில் தவறாது அனைத்து கால்நடைகளுக்கும் விடுபாடின்றி தடுப்பூசி போட்டு பயன்பெறவும், தடுப்பூசி போடுவதற்கு முழுஒத்துழைப்பு நல்கிடவும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post