அரசு அலுவலகத்தில் பாய்போட்டு படுத்து தூங்கும் அதிகாரி... மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யபாமா சரமாரி குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராகிய தனது அனுமதி இல்லாமல் அரசு நிதியை பயன்படுத்திய திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு செயலரை கண்டித்து அதிமுக ஊராட்சிக்குழு தலைவர் சத்யபாமா கவுன்சில் கூட்டத்தில் கடுமையாக குற்றச்சாட்டு வைத்ததுடன் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் அதிக உறுப்பினர்களை பெற்றதன் மூலம், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. அதிமுகவை சேர்ந்த சத்யபாமா மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். 
இந்த நிலையில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். செயலாளர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தார். 

 இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா, மாவட்ட ஊராட்சி செயலாளராக பதவி வகிக்கும் முரளிக்கண்ணன் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மாவட்ட ஊராட்சி பகுதி வளர்ச்சிக்கு அரசு  ஒதுக்கும் நிதியை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாக அவர் கவுன்சில் கூட்டத்தில் வேதனை தெரிவித்து பேசினார். மேலும் அலுவலக பயன்பாட்டுக்கு என பொருட்கள் வாங்குவதில் கூட தனது அனுமதி கேட்பதில்லை எனவும் தானாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

மாவட்ட கூட்டரங்கில் பேசிக் கொண்டிருக்கும் போது இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமாவுக்கும், மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணனுக்கு விவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய சத்யபாமா,  ’மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் முரளி கண்ணன் செய்வது எதுவுமே சரியில்லை. மாவட்ட ஊராட்சி தலைவரின்  அறையில் தினமும் படுத்துதூங்குகிறார். அங்கேயே பாய் தலையணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்திருக்கிறார்.தினமும் அந்த அறையில் தான் குளிக்கிறார். 

இது எல்லாம் சரியா? இதெல்லாம் நான்காண்டு காலமாக நடக்காத செயல். மாவட்ட ஊராட்சி தலைவர் அறையில் அரசு அதிகாரி இப்படி செய்யலாமா?  என்று மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சில் அரங்கிலேயே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து ஆவேசமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய சத்யபாமா கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி கோபத்துடன் வெளியேறினார். 

அங்கிருந்து சென்ற அவர் தனது அறையில் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிக்கண்ணன் தூங்குவதற்காக வைத்திருந்த பாய், தலையணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை அனைவரிடமும் காட்டி கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தால் திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சி தலைவரிடம் சமாதானம் பேசியதை அடுத்து மீண்டும் வந்து மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் அரசு அலுவலக அறைகளில் தங்குவதற்கும், தூங்குவதற்குமாக லாட்ஜ் போல பயன்படுத்தி வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர். 
Previous Post Next Post