திருப்பூரில் கண்டெய்னர் லாரி மோதி பெண் படுகாயம்!

 சாலை கடக்க  முயன்ற பூ வியாபாரம் செய்யும் பெண்ணின் மீது கண்டைனர் லாரி மோதியதில் இரண்டு கால்களிலும் பலத்த காயம் அடைந்து பெண் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பூர் பாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்மணி திருப்பூர் பெருமாள் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சாலையை கடந்து செல்ல முயன்ற போது தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அழகர்சாமியின் கட்டுப்பாட்டை இழந்து சரண்யா மீது மோதியது.

இதில் சரண்யாவின் இரண்டு கால்களிலும் சக்கரம் ஏறி இறங்கியதால் பலத்த காயமடைந்த சரண்யாவை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் ஓட்டுநர் அழகர்சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post