மதுரை,சென்னை அலுவலகங்களில் உள்ள பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சத்தில் தொடர்பு : லஞ்சம் வாங்கி சிக்கிய மத்திய அமலாக்க அதிகாரி விசாரணையில் திடுக் தகவல்.!


 மதுரை,சென்னை அலுவலகங்களில் உள்ள பல அமலாக்கத்துறை  அதிகாரிகளுக்கும் லஞ்சத்தில் தொடர்பு :  லஞ்சம் வாங்கி சிக்கிய மத்திய அமலாக்க அதிகாரி விசாரணையில் திடுக் தகவல்.! 


திண்டுக்கல் அருகே அரசு மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கி தமிழ்நாடு போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய மத்திய அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  தமிழ் நாட்டில் பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளதுடன் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளது எனவும், மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக DVAC வெளியிட்டுள்ள அறிக்கையில்:-



ஒன்றிய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு என்றும் கூறியுள்ளார். 


அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.


இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர். 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக இன்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். 


விசாரணையில் இவர் இது போன்று பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளதுடன் அத்துடன் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இவர் மட்டுமின்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமின்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என தெரிவித்துள்ளது.

Previous Post Next Post