தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிறுவனர் தின விழா : ஆளுநர் பங்கேற்கிறார்.!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவனர் தின விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பொது மேலாளர் டி. இன்பமணி, உதவி பொதுமேலாளர் அசோக் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது "தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. வருகிற நவம்பர் 11 ஆம் தேதி 102வது நிறுவனர் தின விழா கொண்டாடப்படுகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி முதல் வங்கியின் பல்வேறு கிளைகளிலும் ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. நாளை 10ம் தேதி தூத்துக்குடி ஏவிஎம் கமல்வேல் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
விழாவில் அவர், 2 புதிய கிளைகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் வங்கியின் தலைவர், இயக்குநர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.