பள்ளி செல்லாமல் வீடுகளில் முடங்கும் 8000 குழந்தைகள்! கேள்விக்குறியாகும் எதிர்காலம்

 


திருப்பூரில் மொழி தெரியாததாலும், சிறிய குழந்தைகளை வளர்க்க வேண்டி இருப்பதாலும், 8 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வடமாநில தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். எந்த ஒரு அடிப்படை கல்வியும் இன்றி எதிர்காலத்தை தொலைக்கும் இந்த குழந்தைகளுக்கு உரிய கல்வி அறிவு கிடைத்திட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 

பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரை நம்பி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள். பிழைப்புக்காக அசாம், உ.பி., பீகார், மேற்கு வங்கம், ஒடியா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். உணவுக்கே வழி இல்லாமல் வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் வாழ்வு தரும் ஊராக இருக்கிறது.

இவ்வாறு வரும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணி செய்கிறார்கள். நிறைய இடங்களில் நிறுவனங்களே தங்குமிடங்களை அமைத்தும் தருகின்றன. சிறு சிறு வீடுகளை வாடகைக்கு விடும் திருப்பூர்காரர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கென தனியாக வீடு கட்டி வாடகைக்கு விடுவதை ஒரு தொழிலாகவே செய்வதையும் இங்கு பார்க்க முடிகிறது. ஒரே இடத்தில் 300 வீடுகள் வரிசையாக கட்டி குழுவாக வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். 

இதில் செட்டில்மெண்ட் போல புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் குழுவாக தங்கி பின்னலாடை நிறுவனங்களிலும் அதுசார்ந்த நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். 
இவ்வாறு திருப்பூரில் ஏறக்குறை 40 சதவீத அளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இவ்வாறு திருப்பூர் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்குவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.   

தாய்மொழிக் கல்வி கிடைக்காத நிலையில் தமிழில் கற்க வேண்டி இருப்பதால் கல்வி குறித்த புரிதல் இல்லை. இதனால்  புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக அரசு பள்ளிகளுக்கு செல்ல மறுக்கும் நிலை உள்ளது. மேலும் வீட்டில் உள்ள பெரிய குழந்தைகள் சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பது பள்ளி செல்லாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமாகிறது. 
இதன்காரணமாக வீட்டிலேயே முடங்கும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி இல்லாமல், ஒழுக்கமின்றி வளரக்கூடிய நிலை திருப்பூரில் கண்கூடாக காணமுடிகிறது. அவர்கள் வசிக்கும் குடிசைப்பகுதிகளில் குழு குழுவாக விளையாடுவதும், வீட்டிலேயே தங்கிக் கொண்டு இருப்பதையும் காணமுடிகிறது.

 இவ்வாறு இருக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதும் சிக்கலாகிறது. போதை பொருட்களை நாடிச்செல்லும் அபாய நிலையும் உள்ளது. திருப்பூர் சேவ் தன்னார்வ அமைப்பு சார்பில் வடமாநில தொழிலாளர்கள் பகுதிகளில் சிறு அறைகளில் 3 மணி நேரம் டியூசன் நடத்துகிறார்கள்.ஆனால் அதையே முழுமையாக அரசு இயந்திரம் மூலம் செய்வது தான் குழந்தைகள் கல்வியை முழுமையடைய வைக்கும்.

இதுகுறித்து திருப்பூர் சேவ் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் அலோசியஸ் கூறுகையில், ‘ திருப்பூரில் 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் உள்ள நிலையில் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசு பள்ளிகளுக்கு வரும் இவர்கள் மொழி புரியாமல் பள்ளிக்கல்வியை நிறுத்தி விடுகிறார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் அவர்கள் கல்வி கற்பதில்லை. முந்தைய காலங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் (என்.சி.எல்.பி.) திட்டமானது குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை க்ல்வியில் முறைப்படுத்த உதவியது. சிறப்பு மையங்கள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் அளிக்கப்பட்டு முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள். தற்போது இந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். மத்திய அரசு மீண்டும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் இந்த குழந்தைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. எங்களை போன்ற தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். சிறப்பு மையங்கள், உணவு போன்றவை அளிக்கப்படும் இந்த குழந்தைகளுக்கு சிறப்பு மையங்களில் கல்வி அளித்து, முறையான பள்ளிகளுக்கு அனுப்ப வாய்ப்பாக இருக்கும். என்றார். 

இதுகுறித்து ராயபுரம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளி சரோஜ்குமார் கூறுகையில், ‘எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்றால் தமிழ் புரிவதில்லை. அதனால் செல்ல மறுக்கிறார்கள். எனவே எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க இந்தி, தமிழ் இரண்டிலும் சொல்லித்தர வேண்டும். தனியார் பள்ளிகளில் சென்று கல்விகற்குமளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. என்றார்.

இதுகுறித்து வீரபாண்டி நொச்சிபாளையம் பகுதியில், வடமாநில குடியிருப்பில் வசித்து தன்னார்வ மையத்தில் கல்வி பயின்று வரும் 12 வயது மாணவி அஞ்சலி என்பவர் கூறுகையில், நானும் எனது அண்ணனும் பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் எனக்கு தோழிகள் தமிழ் சொல்லி தந்தார்கள். நான் அவர்களுக்கு இந்தி சொல்லி தந்தேன். எனது அண்ணனுக்கு தமிழ் புரியவில்லை. எனக்கும் படிக்க கஷ்டமாக இருந்தது. அதனால் பள்ளியில் இருந்து நின்று விட்டோம். என்றார். 

மொழி தெரியாததும், குழந்தைகளை வளர்க்க வேண்டியதும் என இரண்டு முக்கிய காரணங்களால் வடமாநில தொழிலாளர்கள் கல்வி கற்காமல் முடங்கி இருப்பதை திருப்பூரில் பல்வேறு வடமாநில குடியிருப்புகளில் கண்கூடாக பார்க்க முடிகிறது. அடிப்படை கல்வி என்பது அனைவருக்கும் அவசியமானது, திருப்பூரில் கல்வி இல்லாமல் வீட்டில் முடங்கும் குழந்தைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் பள்ளி செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு தான்.
Previous Post Next Post