வாரத்தில் 3 நாள் கட்டாயம் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் : நவம்பர் 15 முதல் அமல் - ஊழியர்களுக்கு விப்ரோ நிறுவனம் உத்தரவு.!
டிசிஎஸ், இன்ஃபோசிஸைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்கள், வாரத்தில் 3 முறை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இது நவம்பர் 15 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு, அதே நிலை இன்று வரை பல நிறுவனங்களில் தொடர்கின்றன. இந்த முறையை ரத்து செய்து பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் வர விப்ரோ நிறுவனம்
உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொலைதூர வேலை வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு ஈர்க்க ஐடி நிறுவனங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. சில ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப விரும்பாததால் வேலையை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றாக வேலை செய்வதன் மகத்தான நன்மைகள் மற்றும் அலுவலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உணர்ந்து, நாங்கள் இப்போது எங்கள் பணியிட கொள்கையின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த படியை எடுத்து வருகிறோம். அனைத்து ஊழியர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். இந்த முடிவு நவம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வரும். அனைவரும் ஒன்றாகச் செயல்படுவது தொழில்முறை மேம்பாட்டிற்கும், வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய கண்டுபிடிப்புகளை இயக்குவதில் எங்கள் வெற்றிக்கும் முக்கியமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” எனக்குறிப்பிட்டுள்ளது.