இறந்தவர் பெயரிலான ஆதார் கார்டை வைத்து ரூ.15 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு மோசடியாக ஆவணப்பதிவு செய்த நடிகர் சத்தியராஜின் உறவினரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ராமர், பழனிசாமி, வேலுசாமி, சோமசுந்தரம் ஆகியோருக்கு, உடுமலை, கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு வழங்கியது. மேற்படி நிலத்தை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அதற்கு பக்கத்து நிலத்துக்காரரான, நடிகர் சத்யராஜின் மைத்துணர் மனைவி ஊர்மிளாஸ்ரீதர் என்பவர் அந்த நிலங்களை விலைக்கு கேட்டு வந்துள்ளார். விலைக்கு அவர்கள் தராததால், மேற்படி 4 பேரது நிலங்களையும் போலியான ஆவணங்களை தயாரித்து தனது பெயரில் பதிவு செய்து மோசடி செய்துள்ளதாக கூறி
ராமர், பழனிசாமி, வேலுசாமி, சோமசுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஊர்மிளாஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று
ராமர், பழனிசாமி, வேலுசாமி, சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும், தங்களது ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி திருப்பூர் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே இறந்து போன வேலுச்சாமி மற்றும் ராமர் பழனிசாமி ஆகியோரது ஆதார் அட்டைகளை போலியாக போலியாக தயாரித்து ஆவணமாற்றம் செய்துள்ளார். தலா இரண்டு ஏக்கர் என 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மோசடியாக ஆவணப்பதிவு செய்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.