சுடுகாட்டு வாசலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நாட்டு வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் இரண்டாவது மகனும் ஒன்பதாவது வார்டு உறுப்பினருமான அன்பரசு நேற்று இரவு ரவு கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நவீன்குமார் என்பவரின் படத்திறப்பு விழாவிற்காக சென்றுள்ளார்.
அன்பரசு உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் காரில் சென்றுவிட்டு அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து இரவு சுமார் 10:30 பணியாளவில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு ரவுடி கும்பல் அன்பரசு எடுத்து வந்த கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காரின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனை கண்டதும் மது அருந்தி கொண்டிருந்த 7 பேரும் சிதறி ஓடினர். இதில் கையில் மறைத்து வைத்திருந்த வீச்சறிவாளால் ரவுடி கும்பல் அன்பரசை ஓட ஓட விரட்டி இரண்டு கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமரியாக வெட்டி சாய்த்தது.
இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பரசை கொலை செய்தது யார் எதற்காக அவரை கொலை செய்தார்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.