இலங்கையில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

 இலங்கையில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்கம்  மற்றும், ரூ. 63 லட்சம் மதிப்புடைய கரன்சியை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் இருந்து, சினிமா பாணியில் விரட்டி சென்று, மண்ணடியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து பறிமுதல் செய்தனர். அதோடு இலங்கையைச்  சேர்ந்த கடத்தல் பயணியையும் கைது செய்து விசாரணை.

இலங்கையிலிருந்து மிகப் பெரிய அளவில் கடத்தல் தங்கம் விமானத்தில், சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். சென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து சென்னை வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.


இந்த நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த, ஒரு  பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, கடத்தல் தங்கத்துடன் ஏற்கனவே  சென்னை வந்து, விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்ற கூடுதல் தகவல் கிடைத்தது. மேலும் அந்த கடத்தல் ஆசாமி, விமான நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில், சென்னை நகருக்குள் சென்றார், என்றும் தெரிய வந்தது.


இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இலங்கை கடத்தல் பயணியின், செல்போன் டவரை ஆய்வு செய்து கண்காணித்த போது, சென்னை மண்ணடியில் உள்ள ஒரு விடுதியை காட்டியது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு தனிப்படை அதிகாரிகள்,விமானநிலையத்திலிருந்து சென்னை நகருக்குள் விரைந்து வந்து, மண்ணடியில் உள்ள குறிப்பிட்ட அந்த விடுதியை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அங்கு இலங்கை கடத்தல் பயணி தங்கியிருந்த அறையை கண்டுபிடித்து சோதித்த போது, அந்த அறையில் இருந்து 2.5 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.3 கோடி. மேலும் அந்த அறையை சோதனை நடத்திய போது, கட்டுக்கட்டாக இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் ரூ. 63 லட்சம் மதிப்புடையது இருந்தது. அதையும்  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


அதன் பின்பு மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து, பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள், ரூ.63 லட்சம் மதிப்புடைய கரன்சிகள் ஆகியவற்றுடன், சென்னை தியாகராய நகரில் உள்ள, அவர்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.


மேலும் கடத்தல் ஆசாமி தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த பணம், ரூ.63 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு, இந்திய பணம் எப்படி வந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்த தங்க கட்டிகளை சென்னையில் யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார்? இந்த பணத்தை இவரிடம் கொடுத்தது யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனையில் இருந்து எப்படி தப்பி வெளியே சென்றார்?என்றும் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

Previous Post Next Post