தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி : விண்ணப்பிக்க ஆட்சியர்அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்து  உரிய ஆவணங்களுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மூலமாக வட்டியில்லா  பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர்களுக்கு  மிக குறைந்த வட்டியிலும், மாதத் தவணையை தவறாமல் செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனும், மகளிர்களது பொருளாதார மேம்பாட்டிற்காக சுயஉதவிக்குழுக்கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அச்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கணனி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.  கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து  உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களைப்  பெற்று  பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரை 7338749401, பொதுமேலாளரை 8525858055 மற்றும் உதவி பொதுமேலாளரை(கடன்) 7598787407  என்ற  தொலைபேசி எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.  மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை இதர குறைபாடுகளுக்கு மண்டல இணைப் பதிவாளரை 7338749400, தூத்துக்குடி சரக துணைப் பதிவாளரை 7338749402, திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளரை 7338749404,  கோவில்பட்டி சரக துணைப்பதிவாளரை 7338749403 என்ற தொலைபேசி எண்களில்  தொடர்பு கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post