எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கு தொடர்பு.! - லஞ்ச ஒழிப்புத்துறையின் கடிதம் வெளியானதால் பரபரப்பு.!

 

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வேண்டி அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்திற்கு அரசு சார்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியல் அடங்கிய அந்த கடிதமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோவை முன்னாள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பல அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன், லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதம் வெளியான நிலையில் டெண்டர் முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சோதனையின்போது சுமார் 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், எஸ்.பி வேலுமணி செய்த டெண்டர் முறைகேடுகளில் அவருக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறி அவர்களையும் வழக்கில் சேர்த்து, உரிய விசாரணை நடத்த அனுமதிகோரி கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அந்த கடிததுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அந்த கடிதத்தில் முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மதுசூதனன் ரெட்டி, கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் உள்ள பங்கு என்ன என்பதை அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கிக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 7 சாலைகளின் சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்காக 13.6 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், மதிப்பிடப்பட்ட அளவிலிருந்து டெண்டர் மதிப்பு உயர்த்தப்பட்டதும், கட்டணங்கள் மற்றும் பணிகளின் அட்டவணையுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான விகிதங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் மாநகராட்சி அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் கடிதம் வெளியான நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 


       


Ahamed

Senior Journalist

Previous Post Next Post