நாளுக்கு நாள் குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில்,பணியில் அலட்சியம் காட்டியது, அரசு உத்தரவை மதிக்காதது போன்ற குற்றாச்சாட்டின் பேரில் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முகுல் கோயலை உத்தரப் பிரதேச அரசு பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கான உத்தரவை மாநில தலைமை செயலாளர் பிறப்பித்தார். இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது, மாநில டி.ஜி.பி.யாக முகுல் கோயல் தனது பணியில் அலட்சியம் காட்டி வந்துள்ளார். அரசு உத்தரவுகளை மதிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, கடமையை செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது போன்ற அதிகாரிகள் அரசு பணிக்கு தேவையில்லை என்பதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டின் பேரில் டிஜிபி ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல் முறை.
புதிய டிஜிபியை அரசு இன்னும் நியமிக்காத நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) பிரசாந்த் குமார் தற்போதைக்கு பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
உ.பி.யில் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து கொலை, கற்பழிப்பு மற்றும் பிற கொடூரமான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்களில் பலமுறை சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான முகுல் கோயல், இதற்கு முன் எல்லை பாதுகாப்புபடை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் மாநில டி.ஜி..பி.யாக முகுல் கோயல் பொறுப்பேற்றார்