இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் அலுவலகத்திற்கு வெளியே, போராட்டக்காரர்கள் ஒரு மாதமாக முற்றுகையிட்டுள்ளனர்.ஆனால், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பார்லி.,யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
திடீரென ஆயிரக்கணக்கானோர் பார்லி., வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
நிலைமை தீவிரமடைந்து வருவதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, சட்டம்,ஒழுங்கை நிலைநாட்ட வேண்டி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.