தூத்துக்குடி மேற்கு மண்டலத்திற்க்குற்பட்ட 30 ஆவது வார்டு டூவிபுரம் 10 ஆவது தெருவில், குடியிருப்புவாசிகளின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் சுமார் 50 அடி சாலை 30 அடியாக குறுகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்...
'புதிதாக வீடு கட்டுபவர்கள் உயரமாக வீடுகளை கட்டி சாலையில் சுமார் 15 அடி நீளம் 6 அடி உயரத்திற்கு சாய்வுதளம் அமைப்பதால் , தெருவில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவதுடன், மழைக்காலங்களில் தெருவில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் இடறி விழும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
மேலும் சில குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டை சுற்றி சுமார் 10 அடி அகலத்தில் உயரமான திண்டுகளை கட்டி தெருக்களை ஆக்கிரமித்திருப்பது , சைக்கிளில் செல்லும் குழ்ந்தைகள், மற்றும் தெருவில் ஒடியாடி விளையாடும் குழந்தைகள் அதில் மோதி விழும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது மட்டுமின்றி, இது போன்ற ஆக்கிரமிப்புக்களால் வாகனப் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமமும் ஏற்படுகின்றது. அத்துடன் கட்டிடக்கழிவுகளை தெருக்களில் கொட்டி வைப்பதால், அது எலிகள், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வசதி ஏற்படுவதுடன் பெரும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றது. கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டக் கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் விதிகளை யாரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. புதிதாக வீடு கட்டுபவர்கள் சாய்வுதளத்தை (Ramp) பட்டா இடத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரப்பாளர்கள் மீது வழக்கும் பதிந்து, எதிர்காலத்தில் தெருக்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.