தூய மரியன்னை கல்லூரி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து தேனீ வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி.!

தூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து  இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில்  நடைப்பெற்றது.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின்  கணிதத் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து உன்னத் பாரத் அபியான் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் "இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சியை 07.05.2022 அன்று கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலத்திற்கு அருகில் நடத்தியது. 

கோரம்பள்ளம் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் கோரம்பள்ளம் பஞ்சாயத்தைச் சார்ந்த விவசாய பெருமக்களுக்கு இயற்கை விவசாயம் முலம் எவ்வாறு உணவில் நச்சுத்தன்மையை குறைக்கலாம் என்பது பற்றியும், தேனீ வளர்ப்புப் பற்றியும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுநர் திரு.P. வேல்முருகன், உணவு பொருட்களில் இருக்கும் நச்சுத்தன்மைப் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் கூறினார். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், பயனுள்ள விதத்தில் இயற்கை விவசாயம் செய்யும் நுட்பங்களையும் விளக்கினார். 

பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநர் P.K.முத்து குமார் தேனீ வளர்ப்புப் பற்றியும், அதனால் எப்படி பொருள் ஈட்டுவது என்பதையும் உபகரணங்களைக் கொண்டு செய்முறை பயிற்சியளித்தார். காளான் வளர்ப்பு, வீட்டில் தோட்டம் அமைப்பது, மாடி தோட்டம் அமைப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார்.

ICAR-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம், தூத்துக்குடியின் தலைவர் முதுநிலை விஞ்ஞானி, முனைவர்.த. மாசாணச்செல்வம் நவீன விவசாயம் மற்றும் விவசாயத்திற்கான அரசின் செயலிகள் குறித்து விளக்கினார். கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவி செலவ பிரபா இப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இப்பயிற்சி தூய ம‌‌ரியன்னை கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் A.S.J. லூசியா ரோஸ்  மற்றும் துணை முதல்வர், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி முனைவர் Dr.Sr.S.குழந்தை தெரஸ் ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி நடைபெற்றது. 

உதவி பேராசிரியை மற்றும் உன்னத் பாரத் அபியான் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கணிதத் துறை பொறுப்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பசிபிக்கா அவர்கள் பயற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இப்பயிற்சி அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பயிற்சியில் பங்கெடுத்தவர்கள் இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றார்கள்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post