போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் மரணம் தொடர்பாக மூன்று போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக இரண்டு காவலர்களை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று ஈரோடு உப்பிலிபாளையம் முதியவர்கள் படுகொலை குறித்தும், விக்னேஷ் மரணம் குறித்தும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் அரசின் கவனத்தை ஈர்த்து பேசுகையில், ஈரோடு உப்பிலிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களிடம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனிமையில் வாழும், முதியவர்களுக்கு இனிமேலும் இதுபோல நடக்காதவாறு தமிழக அரசு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், விக்னேஷ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணம் குறித்து கூறியதற்கும், தற்போது உடற்கூராய்வு மூலம் கிடைத்த தகவலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது என்று பேசினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:எதிர்க்கட்சித் தலைவர், விக்னேஷ் மரணம் குறித்தும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் குறித்தும் இந்த அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே எதிர்க்கட்சி தலைவர் இங்கே உரையாற்றியிருக்கிறார். சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வாகன சோதனையின்போது, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணையின் போது, உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்பது குறித்து ஏற்கனவே இந்த அவையிலே சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, இந்த அவையில் உள்ள கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் இங்கே பேசியிருக்கிறார்கள்.அப்போது நான் பதிலளித்துப் பேசிய நேரத்தில், ‘விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்” என முறைப்படி வழக்குப் பதிவு செய்து, மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷினுடைய உடல் 20-4-2022 அன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில், மருத்துவ குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது வீடியோ மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றைய தினமே உறவினர்களிடம் முறைப்படி விக்னேஷினுடைய உடல் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரத்தை எல்லாம் நான் அன்றைக்கு தெரிவித்திருந்தேன்.
மேலும், இந்த வழக்கானது, சந்தேக மரணவழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படைக்காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், காவல் துறை இயக்குனர் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24-4-2022 அன்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறேன்.
தற்பொழுது கிடைத்துள்ள விக்னேஷின் உடற்கூராய்வு முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப்போல, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில், இன்று இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலைய சரகம், உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில் துரைசாமி மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் 30-4-2022 அன்று அவர்களது தோட்டத்து வீட்டின் வெளிப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இருவரையும் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். இச்சம்பவத்தில், காயமுற்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதேபோன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், தம்பிரெட்டிப்பாளையத்தில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள், அவர்களுக்கு சொந்தமான ரெட்டிப்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை தாக்கி கொலை செய்து, வள்ளியம்மாள் அணிந்திருந்த சுமார் ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருந்தாலும், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு மேல் இதுபற்றி பேசி, நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை நிச்சயமாக, விரைவில் எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, உங்களுக்கு தேவையான விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, விக்னேஷ் மரணம் சிபிசிஐடிக்கு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. நாங்கள் சிபிஐ விசாரணை கோருகிறோம். எனவே எங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் விக்னேஷ் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கியது. அதன்படி நேற்று சிபிசிஐடி போலீசார் 12 காவலர்களிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் காவலர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதோடு, 4 வாரங்களில் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.