தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.!


தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள  பிரசித்திபெற்ற,  சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா மிக எளிமையாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. 

இந்நிலையில், சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. 

பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சண்முகம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post