"புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது" - தூத்துக்குடி அபிசால்ட் உப்பள வழக்கில் பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை.!

தூத்துக்குடி அபிசால்ட்  உப்பளத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதனை அகற்றுமாறு பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் "புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான அதிகாரம்  வட்டாட்சியருக்கே உள்ளது" எனக் கூறி வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரைக்கிளை. 

தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர்   உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழஅரசரடி பகுதியில் 4.3 ஹெக்டர் பரப்பளவில் அபிசால்ட் என்ற உப்பளம் நடத்தி வருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், இந்த உப்பளத்தில் இருந்து வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். 

காந்தி மல்லர் என்பவர், உப்பளம் அமைந்துள்ள இடங்களை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அதனடிப்படையில் வட்டாட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கள் உப்பளம் அமைந்துள்ள பகுதி புறம்போக்கு நிலம் என வருவாய் துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உப்பளத்தை அகற்ற வேண்டுமென்றும் கீழஅரசரடி ஊராட்சி தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இதுநாள் வரை எல்லாவிதமான வரியையும் முறையாக கட்டி உள்ளேன். ஆகவே, தொடர்ந்து எங்கள் உப்பளத்தை இயக்கவும், உப்பளத்தை அகற்றுமாறு கீழஅரசரடி ஊராட்சி மன்ற தலைவர் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் விஜயகுமார் அமர்வு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது என தெரிவித்து, ஊராட்சிமன்ற தலைவர்  அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post