ஆசைக்கு இணங்காததால் தம்பியின் மனைவி, குழந்தையை வெட்டிக்கொன்று எரித்த கொடூரன் கைது

 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன் இவருக்கு கருப்பையா, சிவகுமார் என இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை சிவக்குமாருக்கு அஞ்சலை (வயது 21) என்பவருடன் திருமணம் ஆகி 2 வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்தநிலையில் அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

நேற்று சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்று உள்ளார். சிவகுமார் மனைவி அஞ்சலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.

கருப்பையாவுக்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அஞ்சலையை அரிவாளால் கருப்பையா தம்பி மனைவி, இளம் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை வெட்டி கொலை செய்தார். 

மேலும் ஆத்திரம் அடங்காத கருப்பையா அஞ்சலையின் 2 வயது பெண் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து உள்ளார். 

இத்துடன் இருவரது உடலையும் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. 

தோட்டத்து பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது 

இதையடுத்து போலீசார் கருப்பையாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post