மதுரை குலுங்கியது.. தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்து வைகையில் இறங்கினார் கள்ளழகர்!

சித்திரைத் திருவிழா என்றாலே மதுரை தான் நியாபகம் வரும்.  லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் திருவிழாவாக கொண்டாடும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கு வைபவம் இன்று நடைபெற்றது.

இன்று காலை தங்க குதிரையில் பச்சைப்பட்டுடுத்தி வந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். அதை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆற்றில் பொதுமக்கள் இறங்க அனுமதி இல்லை என்பதால் மதுரை மக்கள் எல்லாம் சுற்றிலும் திரண்டு இருந்து அழகரை வரவேற்றார்கள். 

கடந்த 5 ம் தேதி தொடங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தை விடவும் மிக கோலாகலமாக நடந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தேரோட்டமும் மதுரை குலுங்க நடந்தது. 

தங்கக் குதிரையில்,கண்டாங்கி பட்டுடுத்தி வேல் கம்புடன் கம்பீரமாக வந்த அழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. தல்லாகுளத்தில் எழுந்தருளி இரவெல்லாம் மக்களுக்கு அருள் வழங்கிய கள்ளழகர், இன்று அதிகாலை ஆற்றில் இறங்கினார். 

பொதுமக்கள் விசிறி வீசியும் தண்ணீரை பீய்ச்சியும் அழகரை வரவேற்றனர். பச்சைப்பட்டுடுத்தி வந்து அழகர் ஆற்றில் இறங்கியதால் நல்ல மழை பெய்து நாடு தழைக்கும் என்பது அனைவரது நம்பிக்கையாக உள்ளது. 


அது சரி அழகர் எதற்கு ஆற்றில் இறங்குகிறார். அது என்ன வரலாறு என்று கேட்பவர்களுக்காக மதுரைக்காரர் ஒருவர் எப்போதோ சொன்ன அழகர் வரும் வரலாறு இதோ:

வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால்,
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது,
அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும்.
அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும்.
சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.
வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா?
வர்ற வழியில கள்ளந்திரி,
அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு.
இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும்.
எங்க வீட்டுக் கல்யாணக்
கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க.
அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும்
கல்யாணம்தான் ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான்,
ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும்.
இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.
இராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,
மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” *கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க…..
ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.
சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால், தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா
தோப்பறையில தண்ணிய
நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).
இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்…
விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும்,
இலட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து “ கோவிந்தாஆஆஆஆ…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு… எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி,
பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு

-மதுரை சுரேஷ்
Previous Post Next Post