தூத்துக்குடி டி.எம்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் மனோகர் மனைவி ஜெயபார்வதி(52). இவர் சிப்காட் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
‘’நான் டி.எம்.பி காலனியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் தெர்மலில் காண்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். எனது பெயரில் கடந்த 19.04.2018ம் வருடம் ராஜேஸ்வரி என்பரிடமிருந்து கே.டி.சி நகரில் உள்ள ஹவுசிங்போர்டில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டினை எனக்கு கிரையம் செய்து கொடுத்தார்.
இந்தநிலையில் கடந்த 8ம் தேதி ராஜேஸ்வரி மற்றும் கோரம்பள்ளத்தை சேர்ந்த பிரபல மந்திரவாதியான சுந்தருடன் சேர்ந்து பூட்டியிருந்த வீட்டின் பூட்டுக்கள் மற்றும் கதவுகளை உடைத்து அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர். அப்போது அருகிலிருந்தவர்கள் எங்களுக்கு தகவல் கூறவும் நானும் எனது கணவரும் எங்களுடைய வீட்டிற்கு சென்றோம். அப்போது பூட்டுக்களையும் கதவுகளையும் உடைத்து உள்ளே சென்ற ராஜேஸ்வரியும் சுந்தரும் என்னை பார்த்து அசிங்கமாக பேசி மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நானும் எனது கணவரும் அங்கிருந்து வந்துவிட்டோம்.
அவர்களால் எங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் பூட்டுக்களை சேதப்படுத்தியதின் மதிப்பு ரூ 3 ஆயிரம் ஆகும். மேலும் எங்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.