திமுக சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி - கனிமொழி எம்.பி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.!*


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆண்-பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி திருச்செந்தூரில் நடைபெற்றது. 

விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


ஆண்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 14 கிலோ மீட்டர் அளவிலும் போட்டி நடைபெற்றது. திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு புறப்பட்டு காயல்பட்டணம், ஆறுமுகநேரி வழியாக மீண்டும் திருச்செந்தூர் வந்தடைந்தது.  

போட்டியில் முதல் பரிசாக ரூ. 1 லட்சமும்,  2-ம் பரிசாக ரூ. 50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 30 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு  தலா ரூ.5 ஆயிரம் வழங்க உள்ளனர்.

ஆண்களுக்கான பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்த ஆகாஷ் முதலிடத்தையும், ஊட்டியை சேர்ந்த நிகில் குமார் 2-ம் இடத்தையும், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த அஜித்குமார் 3-ம் இடத்தையும், ராஜபாளையத்தைச் சேர்ந்த மணிசரத் 4-ம் இடத்தையும் பெற்றனர். 


இதேபோல் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மதுரை கவிதா, 2-ம் இடத்தை சேலத்தைச் சேர்ந்த லதா,  3-வது இடத்தை கீதாஞ்சலி, 4-வது இடத்தை லாவண்யா ஆகியோர் பெற்றனர்.  

போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு  கனிமொழி கருணாநிதி எம்பி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post