இறந்ததாக கருதி புதைக்கப்பட்டார் உயிருடன் வந்தாரா?? ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு

 ஈரோடு மாவட்டம், துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், தேடுவதை தொடர்ந்தனர்.

தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் ஒரு சடலம் இருந்தது., இறந்து கிடந்தது தனது தந்தை தான் என முடிவு செய்தார் கார்த்தி.

உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார்.

அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இறந்ததாக கருதப்பட்டவர் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால், வேறு யாரோ ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்து, நல்லடக்கம் செய்த விஷயம் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்

Previous Post Next Post