அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த உள் ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத உள் ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறதே என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு  மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத உள் ஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும். உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் 7.5% உள் ஒதுக்கீட்டில் பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#HighCourt #MBBS #Govt #schools #reservation

Ahamed

Senior Journalist

Previous Post Next Post