பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை முழுமையாக நிறுத்தி வைத்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் உத்தரவால், கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பின்னலாடைத் தொடர்பான வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பருத்தி இறக்குமதிக்கு 5 சதவீதம் அடிப்படை சுங்க வரி ( பிசிடி ) மற்றும் 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (ஏஐடிசி) விதிக்கப்படுகிறது. உள்நாட்டில் விலை குறைய வரி விலக்கு கோரி தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முன்னதாக பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசும், ஒன்றிய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.