கர்நாடகாவில் இருந்து வைக்கோல் கட்டுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடி வழியாக கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப் படுவதாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திம்பம் மலைப்பாதை வழியாக ஈரோட்டுக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது வைக்கோல் புல் கட்டுக்கு நடுவே சுமார் 4 லட்சம் மதிப்பிலான 200 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேனில் வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித், சக்திவேல், கோபால், சங்கர் என்பதும் தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த சத்தியமங்கலம் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.