திருச்செந்தூர் : விஐபி தரிசன மேல்முறையீட்டு வழக்கு - ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் முறையாக சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒழுங்கு படுத்துவதற்காகவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை உடனடியாக பின்பற்றியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, காவல் துறையினரை அதிகரிப்பது, விஐபி தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு  கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம், கோவிலை தூய்மையாக வைத்தல் போன்ற பல்வேறு தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு  இன்று  விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் முறையாக சென்று  சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒழுங்கு படுத்துவதற்காகவும் தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவுகளை உடனடியாக பின்பற்றியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. 

 மனுதாரர் தரப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து செல்லும் பணியை திருசுதந்திரர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் கிடையாது. எனவே இவர்களது உரிமை பாதிக்கப்படகூடாது" என தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து  நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post