தூத்துக்குடியில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொடூர கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!


தூத்துக்குடியில் பெண்ணை கொலை செய்து விட்டு நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி (62). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். 

இந்நிலையில் இன்று பிற்பகல் பவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரை கழுத்தை நெறித்தும், கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் காதில் அணிந்திருந்த கம்மல்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சம்பத், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் நகை, பணம் இருக்கிறதா? என பார்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலையில் 3பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post