சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரசாதம் கேட்ட தீட்சிதருக்கு அடி உதை! - மருத்துவமனையில் அனுமதி.!

.




சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர் கிருஷ்ணசாமி தீட்சிதர் (62). இவர், புதன்கிழமை இரவு கோவிலில் உள்ள தீட்சிதர்கள் அலுவலகத்திற்கு லச்சார்ச்சனை நெய்வேத்தியம் பிரசாதம் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தற்போதைய கோவில் செயலாளர் ராஜகணேசன் தீட்சிதர் என்பவருடைய தம்பி ரவிசெல்வன் தீட்சிதர், கிருஷ்ணசாமி தீட்சிதரிடம் ‘உனக்கு பிரசாதம் தர முடியாது’ என கூறியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி ரவிசெல்வன், கிருஷ்ணசாமியை கையால் அடித்து நெட்டி தள்ளி உதைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத கிருஷ்ணசாமி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்குள் கிருஷ்ணசாமியின் மகள், அவர் உள்நோயாளியாக மருத்துவமனையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன் இரவு 11 மணியளவில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இந்த விவகாரம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கோவிலுக்கு உள்ளே இருக்கும் கனகசபையில் பொதுமக்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அனுமதிக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தும் தீட்சிதர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரசாதம் கேட்ட தீட்சிதர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post