"மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்"- தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் "பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை கழகம் காணாத மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தந்திருக்கிறீர்கள் அனைவருக்கும் எனது நன்றி. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 


மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன். கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக திருந்திக்கொள்ள வேண்டும்; இல்லையேல் உரிய நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். 


விழாவில்  அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சன்முகையா,  துணை மேயர் ஜெனீட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post