தூத்துக்குடி ஸ்பிக் ஆலையில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து 

அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


22 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்திட்டம், நவீனகால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த ஸ்பிக் நிறுவனத்தின்நவீன உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப்பற்ற தண்ணீரை ஆவியாகி சேமிக்கிறது. 

இச்சூரிய மின்சக்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார்  உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தவிர, 


நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60 சதவீதம் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். 

ஸ்பிக் நிறுவனத்தின் மிதக்கும் சூரியமின் நிலையத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு மைல்கல்லாக அமையும். 

நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,  

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன், முதன்மை நிதி அலுவலர் கே.ஆர். ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post