தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று துவக்கி வைத்தார்.

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

பின்னர் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,தெரிவித்ததாவது


தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடைகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் முகாம்கள் நடத்தி அங்குள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறையினர், தடுப்பூசிகள் சரியான தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக குளிர்சங்கிலி முறையில் தடுப்பூசிகளை கொண்டு சென்று தடுப்பூசி போடப்படுகிறது. 

தடுப்பூசி போடப்படுவதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் அவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் வராமல் காத்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.ராஜன், துணை இயக்குநர் மரு.ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் மரு.அன்டனி சுரேஷ், மரு.சந்தோசம் முத்துக்குமார், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.ஆனந்தராஜ், மரு.சையத் அபுதாகிர், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டு உறுப்பினர் காந்திமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post