குவைத் :300 தமிழக மீனவர்கள் போராட்டம் - அமைச்சரிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை.!

 

ஈரான் நாட்டின் கடற்கொள்ளையர்களால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி, கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குவைத் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அவர்கள் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் :- 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்  தங்களது வறுமை காரணமாக  சுமார் 90 கேப்டன்களை கொண்ட 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் குவைத் நாட்டிற்கு மீன்பிடி வேலைக்காக சென்றுள்ளனர்

குவைத் நாட்டில் கடலில் மீன் பிடித்து தங்களின் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக கொண்டு சென்று கொண்டிருக்கும் சூழலில் தற்போது அண்டை நாடான ஈரான் நாட்டை சேர்ந்த  கடற்கொள்ளையர்கள் காலை மாலை என்று இல்லாமல் திடீர் திடீர் என படகில் வந்து துப்பாக்கி சூடு நடத்தி  மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் மற்றும் திசை காட்டும் கருவி பணம் உள்ளிட்டவைகளை அடித்து கொண்டு சென்று விடுகின்றனர். 

மேற்கண்டவற்றை கொடுக்க மறுத்தால் கத்தியை காட்டி கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர் இதனால் உயிருக்கு உத்தரவாதமும் இல்லை மீன் பிடிக்க செல்லவும் முடிய வில்லை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். 

கடற் கொள்ளை குறித்து பணிபுரியும் நிறுவன முதலாளிகளிடம் சொல்லும் போது உங்களுக்கு ஏதேனும் நடந்ததா என கேட்க இல்லை என்று சொன்னதும் இறைவன் கருணையாளன் என கூறி கடந்து சென்று விடுகின்றனர். 

படகை எடுத்து செல்லும் போது மீன் பிடித்து விற்கவில்லை எனில் நஷ்டம் மீனவர்களையே சாரும். இதனால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்குள்ள தமிழக மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே இப்பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல  தமிழகஅமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்கள் இவ் விசயத்தில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, தமிழ்நாடு முதல்மைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வதுடன், மத்திய அரசின் மூலம் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக குவைத் அரசுக்கு கோரிக்கை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஈரான் நாட்டின் கவனத்திற்கும் கொண்டு சென்று மீனவர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நிம்மதியாக கடற்கொள்ளையர்களின் ஆபத்தின்றி  மீன் பிடித்து வர  உதவிட மீனவர்கள் சார்பில் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் வெளிநாட்டில்  வாழும் தமிழர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் கமால் நாசர், பொது செயலாளர் கண்ணன், மாநில நிர்வாகிகள், அஹமத், ஐயப்பன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி சாதிக் கான்,ஆகியோர் உடன் இருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post