கோவில்பட்டி வியாபாரி வீட்டில் 2 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு.

கோவில்பட்டி வியாபாரி வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 3-வது தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் பூல்பாண்டி (வயது 36). வியாபாரி. தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை நிறுத்தி விட்டு, குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றுக்கு தீ வைத்து  விட்டு தப்பி ஓடிவிட்டனர். பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வாகனங்கள் தீ பிடித்து எரிவதை பார்த்து பூல்பாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பூல்பாண்டி மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாகனங்களின் மீது தண்ணீரை ஊற்றி தீைய அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. மொபட்டும் பலத்த சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களுக்கு தீவைத்தது யார்? காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவைப்பு சம்பவங்களில் தொடர்புடைய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் வாகனங்கள் தீவைத்து எரித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post