மார்ச்.12ல் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு


தூத்துக்குடியில் வருகிற 12ம் தேதி மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட ஏதுவாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட /மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 12-03-2022 அன்று நடைபெறவுள்ளது.

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் கலை 10.00 மணிக்கும் கிராமிய நடம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள் குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) 

நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்குருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும் அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் www.artandculture.tn.gov.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

கலைப்போட்டிகள் நடைபெறும் இடம்:

மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், சிலுவைபட்டி தாளமுத்துநகர் காவல் நிலையம் அருகில் தூத்துக்குடி -2   

அலைபேசி எண். 94877 39296, 97898 43829

Previous Post Next Post