வாடகை வீட்டில் குடியிருந்தவரின் மண்டையை உடைத்த வீட்டின் உரிமையாளர்


வீட்டு உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், வாடகைதாரரின் மகளின் மண்டை உடைக்கப்பட்ட புகாரில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர், ராஜசேகரன். இவரது, மனைவி சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். 

மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசு பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

கடந்த, 16ம் தேதி, திடீரென வீட்டின் உரிமையாளர், ரமேஷ் என்பவர், வீட்டை இரவோடு இரவாக காலி செய்யுமாறு, சுமதியிடம் கூறியுள்ளார். அதற்கு, தான் முன்பணமாக கொடுத்த, 50 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார். 


அதை, கொடுக்க மறுத்த, ரமேஷ் மற்றும் அவரது மகன்கள், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி, சுமதியை ஆபாசமாக பேசி உள்ளனர். 

அதை தட்டிகேட்ட, சுமதியின் மகளிடம், ரமேஷின் இரண்டாவது மகன் அத்துமீறி நடந்ததுடன், ஆபாசமாக பேசி உள்ளார். 

இது தொடர்பாக, கடந்த, 17ம் தேதி சுமதி அளித்த, புகாரை சேலையூர் போலீசார், விசாரிக்காமல் அலைக்கழித்து வந்த நிலையில், இரண்டு நாட்களக சுமதி வீட்டின் மின் இணைப்பை, ரமேஷ் துண்டித்துள்ளார். 

இது பற்றி, இன்று காலை, சுமதி மீண்டும் கேட்டபோது, ரமேஷ் ஆபாசமாக பேசியதால், இருதரப்பிற்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதில், சுமதியின் மகளை ரமேஷ் தாக்கியதில், சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மூன்று தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, காயமடைந்த சிறுமி, அளித்த புகாரின்படி, சேலையூர் போலீசார் 294(b), 324, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வீட்டு உரிமையாளர் ரமேஷை கைது செய்தனர்.

Previous Post Next Post