சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியானது. மக்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் IMDB ரேட்டிங்கில் உலக அளவில் முதலிடம் பிடித்தது. படம் வெளியாகி சூர்யா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாமக கட்சியில் இருந்து போர்க் கொடிகள் கிளம்பியது.
படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சியில் காலண்டரில் அக்னிசட்டி படம் இடம் பெற்றிருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்று பாமக தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் அந்த காட்சியில் சரஸ்வதி படத்தை மாற்றி அப்போதே அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா. ஆனாலும் தொடர்ந்து இப்படத்தின் மீது பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பாமகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் என அறிவித்திருந்தார் பாமக கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர். மேலும் எங்களுக்கு 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சூர்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சூர்யாவிற்கு திரையுலகிலிருந்து முதலில் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் நேற்று அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவுகள் குவிய ஆரம்பித்தன. இயக்குனர் பாரதிராஜா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் சங்கம் என தங்களது ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்தனர். இன்னிலையில் திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக, யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல என சந்தானம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 19ஆம் தேதி சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான விழாவில் நடிகர் சந்தானம் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு உங்களது ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு, பட விளம்பர வேலைகளில் பிஸியாக இருப்பதால் #istandwithsuriya பற்றி எனக்கு தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது இணையத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக் மூலமாகவே அவர் பஞ்சர் செய்யப்பட்டு வருகிறார். அவரது படங்களில் மற்றவர்களை உருவ கேலி செய்ததை எடுத்து பதிவிட்டு வருகின்றனர் இணையவாசிகள். சந்தானம் இந்த சமயத்தில் இவ்வாறு பேசியிருக்க வேண்டாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.