மீனவர்கள் போராட்டம் எதிரொலி...கச்சத்தீவு திருவிழாவில் இந்திய தமிழர்கள் பங்கேற்கவில்லை... ராமேஸ்வரம் பங்குத்தந்தை சந்தியாகு அறிவிப்பு

 கச்சத்தீவில் 23ஆம் தேதி நடைபெறுகின்ற புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் தமிழக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்க போவதில்லை என ராமேஸ்வரம் பங்குத்தந்தை அறிவித்திருக்கிறார்.

இலங்கை இந்தியா இருநாட்டு மீனவர்களின் நல்லுறவை ஏற்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3500 பக்தர்களும் இலங்கை தரப்பிலிருந்து நான்காயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இருநாட்டு அரசாங்கமும் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


 இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்களை விடுவிக்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நடைபயண போராட்டம் நடைபெற்றது. போராட்டம் விவரம் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மீனவர்களுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவர்களின் நடை பயண போராட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்பொழுது தொடர்கிறது


தொடர் போராட்டத்தின் எதிரொலி காரணமாக இலங்கையில் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து சுமார் 3500 பேர் கலந்து கொள்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் மீனவர்களின் போராட்டம் எதிரொலி காரணமாக பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தற்போது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பணம் கட்டிய நபர்களின் தொகை மீண்டும் திரும்ப வழங்கப்படும் எனவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பதிவு செய்த நபர்கள் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும் எனவும் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தற்போது தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்திய தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ராமேஸ்வரம் ராஜா

Previous Post Next Post